காந்தியின் பன்முகங்கள் அல்லது பல வடிவங்கள் என்று இப்புத்தகத்தின் பெயரைத் தமிழ்ப் படுத்தலாம்.

அட்டைப் படம்: "பஹுரூபி காந்தி" Bahuroope Gandhi - Written by : Anu Bandopadhyaya First Published : April 1964
“பஹுரூபி காந்தி“ என்கிற இச்சிறிய புத்தகம் அனு பந்தியொபாத்யாய் என்பவரால் எழுதப் பட்டது – இதனை நான் முதலில் படித்தது சுமார் நாற்பதாண்டுகட்கு முன்பு. ஆனால் இப்போது படிக்கும் போதும், அதே பிரமிப்பு தான் எனக்கு.
அடிப்படையில் இது சிறார்களை, இளைஞர்களைக் குறி வைத்து எழுதப் பட்டது.அவர்களது கலைக்கப் படாத உள்ளுணர்வுகளுக்கு. கலங்காத நேர்மைக்கு, மகத்தானக் குறிக்கோட்கள் நோக்கிய மனிதநேயம் சார்ந்த முனைப்புகளுக்கு – உரமிடும் வகையில் அமைந்த, எளிய வாக்கியங்கள் நிறைந்தது இப்புத்தகம். ஆர் கே லக்ஷ்மன் அவர்களின் எளிமையான கோட்டோவியங்கள் கொண்டது. கூட ஜவஹர்லால் நேருவின் முன்னுரையும்.
ஏப்ரல் 1964-ல் பாபுலர் ப்ரகாஷன் பதிப்பகத்தினரால் வெளியிடப் பட்டு பின் ஒரு சில பதிப்புகளே வந்து கடைசியில் தேசீயக்கல்வி ஆராய்ச்சி, பயிற்சிக் குழுமத்தால் ( NCERT) மறுபடியும் 1981 -ல் பதிப்பிக்கப் பட்டது இது.
எனக்குத் தெரிந்து கன்னட மொழியில் கூட வந்துவிட்டது இப்புத்தகம் – சில வருடங்கள் முன்; ஆனால் நம் தமிழில் இதுவரை வரவில்லை.
ஆனால், என்னைப் பொறுத்தவரை – மிக எளிமையாக எழுதப் பட்டதாக இருந்தாலும், இது காந்தியைப் பற்றி எழுதப் பட்ட புத்தகங்களில் மிக முக்கியமானது. அனைத்து இந்திய மொழிகளிலும் கொணரப் பட வேண்டியது இது.
ஆகவே, இப்புத்தகத்திற்கு நான் நம் தமிழில் ஒரு பெயர்ப்பைப் பண்ணலாம் என இருக்கிறேன்; நேரம் கிடைக்கும்போது 2-3 நாட்களுக்கு ஒரு முறை, இப்புத்தகத்தின் ஒரு அத்தியாயம் இங்கு பதிக்கப் படும்.
(கவனிக்கவும், இது ஒரு சுத்த மொழி பெயர்ப்பு அல்ல; என் முக்கிய உந்துதல், “பஹுரூபி காந்தி” யின் இலக்கண இலக்கிய சன்மார்க்க சத்திய சுத்தமான உருவாக்கம் அல்ல. மாறாக – ‘தேசப் பிதா,’ ‘அண்ணல்,’ ‘அஹிம்சாவாதி,’ சத்யாக்ரஹி,’ ‘இந்தியப் பண்பாட்டை மீட்டெடுத்தவர்’ போன்ற பரிமாணங்களுக்கப்பால், மிக மிக அப்பால், அவர் தம் ஆளுமைகளை, கர்ம-ஞான யோகதரிசனத்தை, முழு மனிதராக உலாவியதை, சிறிய கோடிட்டுக் காட்டுவது தான்)
மறுமொழிகள்
தங்கள் மொழிபெயர்ப்புப் பணி அசுத்த மாயையை போக்கடிக்கும் என நம்புகிறோம்.
தங்களை பற்றி ஜெயமோகன் தளத்தில்
http://www.jeyamohan.in/?p=23781
தாங்கள் செய்யப்போகும் இந்த நல்ல பணிக்கு என்னுடைய முன்கூட்டிய நன்றிகளும் வாழ்த்துகளும்.
த.துரைவேல்